திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டத்தின் மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக காய்ச்சலுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தாலும், திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்தோரும் காய்ச்சல் காரணமாக திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் காய்ச்சல் சிகிச்சைப் பிரிவில் 141 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களில் 10 பேருக்கு டெங்குகாய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்கள் டெங்கு காய்ச்சல் வார்டுக்கு மாற்றப்பட்டு, தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இதில் 4 குழந்தைகள் அடங்குவர்.
கடந்த 24ஆம் தேதி காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் டெங்கு காய்ச்சலாக உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டம், மணிகண்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மகள் கிரிஷ்கா (4) வியாழக்கிழமை முற்பகலில் உயிரிழந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்து, சிகிச்சை பலனில்லாமல் தங்கள் மகள் உயிரிழந்ததை கண்டு, கிரிஷ்காவின் பெற்றோரும், அவரது உறவினர்களும் கதறி அழுதனர்.
மூளைக் காய்ச்சலால் சாவு என தகவல் : சிறுமி கிரிஷ்கா டெங்குகாய்ச்சலால் இறக்கவில்லை என்றும், அவருக்கு ஏற்பட்ட மூளைக் காய்ச்சல் காரணமாகவே அவரது இறந்துவிட்டதாக மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.