காரைக்கால் மாவட்டம், அகலங்கண்ணு பகுதியில் 12 நாள்கள் நடைபெறும் காவிரி மகா புஷ்கரம் விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
காவிரி புஷ்கரம் திருவிழா, காவிரி நீர் பாயக்கூடிய நண்டலாறு, நாட்டாறு, வாஞ்சியாறு, நூலாறு, அரசலாறு, திருமலைராஜனாறு, பிராவடையனாறு ஆகிய 7 முக்கிய கிளை ஆறுகளைக்கொண்டிருக்கக்கூடிய காரைக்காலில் முதல்முறையாக நிகழாண்டு நடத்தப்படுகிறது.
அதன்படி, திருநள்ளாறு அருகே உள்ள அகலங்கண்ணு கிராமத்தில் அரசலாறு பகுதியில் சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள நீர்த் தேக்கத்தில் காவிரி புஷ்கரம் விழா தொடங்கும் வகையில் அதன் அருகே 12 கலசங்களில் தண்ணீர் நிரப்பப்பட்டு சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. மாலை 6 மணியளிவில் தீர்த்தக்கரைக்கு, அகலங்கண்ணு ஸ்ரீ சிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீ வைத்தியநாதசுவாமி, விழுதியூர் ஸ்ரீ வீழிநாதசுவாமி எழுந்தருளினர்.
சிறப்பு ஹோமத்தின் நிறைவில் பூர்ணாஹுதி தீபாராதனை செய்யப்பட்டு, 12 கலசங்களும் சிவாச்சாரியார்களால் நீர்த் தேக்கத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அதில் புனிதநீர் ஊற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, அஸ்திர தேவருக்கான பூஜைகள் செய்யப்பட்டு புனிதநீராடல் தொடங்கியது.
தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு புனித தீர்த்தக் குளத்தில் நீராடினர். நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர். கமலக்கண்ணன், சட்டப்பேரவை உறுப்பினர் கீதாஆனந்தன், மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பா.தில்லைவேல், நிர்வாக அதிகாரி ( கோயில்கள்) எஸ்.கே.பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளர் வி.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
செப். 24-ஆம் தேதி வரை புஷ்கரம் விழா நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் கோயில்களில் இருந்து சுவாமிகள், தீர்த்தக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.