வேளாண்மை உதவிப் பொறியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 13 -ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு வேளாண்மை பொறியியல் பணியில் 21 உதவிப் பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்த இடங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 7 -இல் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வினை 3 ஆயிரத்து 241 பேர் எழுதினர். அவர்களில் 46 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 13-ஆம் தேதி நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.