காவிரி விவகாரத்திலிருந்து அரசியலை அகற்றுங்கள்
காவிரி நதிநீர் விவகாரத்திலிருந்து அரசியலை அகற்ற வேண்டும் என்று நடிகர் பிரகாஷ்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர், தனது சுட்டுரைப் பக்கத்தில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது:
தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் காவிரி நீரில் எப்போது அரசியல் கலந்ததோ, அப்போதே காவிரி கறைபடத் தொடங்கியது. ஒரே தேசத்துக்குள் இருக்கும் சகோதர மாநிலங்களால் தண்ணீரைச் சுமூகமாக பகிர்ந்து கொண்டு நட்புடன் இருக்க முடியவில்லை என்பது வருத்தத்துக்குரியது. இதற்கு வாக்கு வங்கி அரசியல் இன்றி வேறு காரணங்கள் இல்லை.
விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னையில் அரசாங்கங்கள் கண்ணாமூச்சி ஆடுவது மக்களை ஏமாற்றும் செயல். வாக்குகளுக்காக அரசியல் செய்யும் சுயநலவாதிகளின் சூழ்ச்சியை காவிரியால் கடக்கவே முடியவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கட்சிகள், தங்களுடைய அரசியல் லாபங்களுக்காக மக்களைப் பிரித்து அவர்களை வாக்கு வங்கியாக பயன்படுத்துகின்றனர்.
அரசியல் தலைவர்கள் தீர்வு தேடுவதில் அக்கறை காட்டாமல், உணர்ச்சிகளைத் தூண்டி கலவரம் செய்து குழம்பிய குட்டையில் அதிகார மீன்களை பிடிப்பதிலேயே கவனம் செலுத்துகின்றனர். காவிரியை வைத்து கலவரம் செய்கிறவர்கள் யாரும் காவிரி ஆற்றில் மணல் அள்ளும் மாஃபியாக்களுக்கு எதிராக சிறு துரும்பைக் கூட கிள்ளிப்போடுவதில்லை.
பேராபத்தில் முடியும்: இனிமேலும் காவிரி நதி நீர் பிரச்னையில் அரசியல் தொடர்ந்தால், அது மீட்க முடியாத இழப்புகளைத் தரும் பேராபத்தில் முடியும். நதிநீரிலிருந்து அரசியலை அகற்றுங்கள்; எல்லாம் தானாகச் சரியாகும் என்று தமது பதிவில் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.