பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்களை அனுப்பி வைக்காத மெட்ரிகுலேசன் பள்ளிகளுக்கு தேர்வு முடிவுகள் கண்டிப்பாக வெளியிடப்பட மாட்டாது என அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:- பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் முகாம்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டு, விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஒரு சில மாவட்டங்களில் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பணிபுரியும் மேல்நிலை முதலாம், இரண்டாம் ஆண்டுக்கு வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களை சில மெட்ரிக் பள்ளி நிர்வாகங்கள் விடைத்தாள் திருத்தும் முகாம்களுக்கு அனுப்பாமல் உள்ளன.
மேல்நிலைப் பள்ளி பொதுத் தேர்வுகளுக்கு அதிகளவில் மாணவர்களை அனுப்பும் மெட்ரிக் பள்ளிகள், விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு ஆசிரியர்களை விடுவிக்காத செயலானது மிகவும் கண்டிக்கத்தக்கது.
இதன் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது.
விடைத்தாள் திருத்தும் பணியானது ஆண்டு முழுவதும் மாணவர்களுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர்களின் தார்மீக கடமை ஆகும்.
அனைத்து மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர்களும் தங்கள் பள்ளியில் பணிபுரியும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பாடம் நடத்துவதில் இரண்டு ஆண்டுகள் அனுபவம் உள்ள அனைத்துப் பாட ஆசிரியர்களையும் (with copy of their appointment order) விடுவித்து மதிப்பீட்டு முகாம்களுக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அவ்வாறு அனுப்பி வைக்காத மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் தேர்வு முடிவுகள் கண்டிப்பாக வெளியிடப்பட மாட்டாது என அதில் கூறியுள்ளார்.