சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்குரைஞருக்கு, மத்திய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகத்தின் இந்த ஆண்டுக்கான அறிவுசார் சொத்துரிமை விருது வழங்கப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்ற அரசு வழக்குரைஞராக பணியாற்றியவர் ப.சஞ்சய் காந்தி. இவர் அறிவுசார் சொத்துரிமை வழக்குரைஞர் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகிக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள பாரம்பரிய பொருள்களான தஞ்சாவூர் வீணை, காஞ்சிபுரம் பட்டு, பத்தமடை பாய், திண்டுக்கல் பூட்டு, நாச்சியார் கோயில் குத்து விளக்கு, மாமல்லபுரம் கல்சிற்பம், பவானி ஜமுக்காளம், மதுரை சுங்கடிசேலை, மானாமதுரை கடம் உள்ளிட்ட 29 க்கும் மேற்பட்ட பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று தந்ததில் இவரது பங்கு முக்கியமானது.
இவரது சேவையைப் பாராட்டி மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இந்த ஆண்டுக்கான தேசிய அறிவுசார் சொத்துரிமை விருதை வழக்குரைஞர் ப.சஞ்சய் காந்திக்கு வியாழக்கிழமை (ஏப்.26) தில்லியில் வழங்குகிறது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசும் அவருக்கு வழங்கப்படவுள்ளது.