மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி வழக்கின் விசாரணை, பல்கலைக்கழகத்தின் உயர் பதவிகளில் உள்ளவர்களை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதுதொடர்பான உண்மைகளைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகப் பணியாளர் சங்கம் விசாரணை அமைப்புகளிடமும், பொதுவெளியிலும் வெளியிட்டு வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில், பல்கலைக்கழகப் பணியாளர்கள் யாரும் போராட்டங்களில் பங்கேற்கவும், பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கவும் கூடாது என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த விவகாரத்தில் பாலியல் சர்ச்சை குறித்த ஆதாரங்கள் மட்டுமின்றி, பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஊழல்கள், தகுதியற்ற நியமனங்கள் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்த ஆதாரங்களும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனால், தமது பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சும் துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை, அதைத் தடுப்பதற்காகவே போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எனவே, காமராஜர் பல்கலைக்கழகத்தின் பெயரையும், புகழையும் மீட்கப் போராடுவோருக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை முடிந்து குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை துணைவேந்தர் பதவியிலிருந்து செல்லத்துரையை நீக்கி வைக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.