அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றும் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் வட்டார அளவிலான பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் ப.சிதம்பரம் பேசியதாவது:
தற்போது மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக அரசால் நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது.
நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் தமிழகத்தை பொருத்தவரை பாஜகவுக்கு வாய்ப்பு என்பது கிடையாது. தற்போதைய சூழ்நிலையில் வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று, ஆட்சியைக் கைப்பற்றும் என்றார்.