ஓட்டுநர்களுக்கு வசதியாக அரசுப் பேருந்துகளின் முன்பக்கத்தில் இருபுறமும் பெரிய அளவிலான பக்கவாட்டு கண்ணாடிகளை பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பெருமளவு விபத்துகளை தவிர்க்கலாம் என்று மாநில போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
அரசுப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் சாலையின் இருபுறமும் பேருந்து அருகே வரும் வாகனங்களை எளிதில் கண்டறிய தற்போது பக்கவாட்டில் உள்ள சிறிய ரக கண்ணாடிகள் (குழி, குவி ஆடி) போதுமானதாக இல்லை. இதனால் இருசக்கர வாகனங்கள், சிறிய ரக சரக்கு போக்குவரத்து வாகனங்கள் பேருந்தின் அருகே மிக நெருக்கமாக வருவதை அறிய முடியாமல் விபத்துக்களை சந்திக்கும் சூழல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அரசுப் பேருந்துகளின் முன்பக்கத்தில் இருபுறங்களிலும் உள்ள சிறிய ரக கண்ணாடிக்கு பதிலாக பெரிய அளவிலான கண்ணாடிகளை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநில போக்குவரத்துத் துறை செயலர் பிடபுள்யுசி டேவிதார் வெளியிட்டுள்ள உத்தரவில், மாநிலத்தில் உள்ள 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளின் முன்பக்கத்தில் உள்ள சிறிய ரக பக்கவாட்டு கண்ணாடிகளை மாற்றி, பெரிய வகையிலான கண்ணாடிகளை பொருத்த வேண்டும். இந்த வகைக் கண்ணாடிகள், பின்புறத்திலிருந்து பேருந்தை முந்திச் செல்லும் வாகனங்களை எளிதில் கண்டறியவும், சாலையின் இருபுறமும் வரும் வாகனங்களை ஓட்டுநர்கள் கவனத்தில் கொள்ளவும் உதவியாக இருக்கும்' என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.