கேரள வெள்ள நிவாரணத்துக்கு மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதியுதவி அளிக்கப்படும் என அதன் நிறுவனர் அமிர்தானந்தமயி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அந்த மடம் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
எப்போதும் இல்லாத அளவுக்கு தொடர்ச்சியாக பெய்து வரும் கன மழை, கேரள மாநிலத்தை வெள்ளக் காடாக மாற்றி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் ரூ.10 கோடி வழங்கப்படும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவ அறிவியல் ஆராய்ச்சி மையம், கொல்லம் அருகே உள்ள அமிர்தா கிருபா நல அறக்கட்டளை மருத்துவமனைகளிலிருந்து மருத்துவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வயநாடு, ஆலப்புழை மாவட்டங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி வருவதுடன் உணவு, உடைகள் ஆகியவற்றை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வருகின்றனர். கடந்த 2001 -ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ரூ.475 கோடிக்கும் அதிகமான தொகையை பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக இந்த மடம் வழங்கியுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.