சென்னையில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரணை செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், அண்ணாநகர் எப் பிளாக்கில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
சீனிவாசன் கடந்த 5 ஆம் தேதி வீட்டில் இருந்து தனது நண்பர்களைப் பார்க்கப் புறப்பட்டுச் சென்றார். ஆனால், அதன் பின்னர் அவர் வீட்டுக்குத் திரும்பி வரவில்லை. இதையடுத்து அவரது மனைவி ஜூலி, சீனிவாசனின் செல்லிடப்பேசியை தொடர்பு கொண்டாராம். ஆனால் சீனிவாசன் பேசவில்லை.
அன்று இரவு சீனிவாசன் செல்லிடப்பேசியில் இருந்து வேறு ஒரு நபர் மிரட்டும் வகையில் ஜூலியிடம் பேசினாராம். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜூலி, அண்ணாநகர் காவல் நிலையத்தில் தனது கணவர் சீனிவாசன் காணாமல் போனது குறித்து வியாழக்கிழமை புகார் செய்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார், விசாரணையை தொடங்கினர். விசாரணையில், சீனிவாசன் ஊட்டியில் இருப்பதும், அங்குள்ள ஒரு சொத்தை விற்பதற்காக சென்றிருப்பதும் தெரியவந்தது.