பிளாஸ்டிக்கை தடை செய்யும் தமிழக அரசின் அரசாணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தமிழகத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கு வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது. இதற்கான அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டது.
இந்நிலையில் பிளாஸ்டிக்கை தடை செய்ய பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம், 2019ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக்கை தடை செய்யும் அரசாணைக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. மேலும் மனுதாரரின் மனுவிற்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.