நடிகர் ரஜினியின் ஒப்பனையாளர் (மேக்கப்மேன்) முத்தப்பா (89)உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
திரைப்பட தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்பச் செட்டியார் மூலம் திரைப்பட ஒப்பனையாளராக திரையுலக வாழ்க்கையைத் தொடங்கியவர் முத்தப்பா. சிவாஜிகணேசன் நடித்த பராசக்தி படத்தில் உதவி ஒப்பனைக்கலைஞராக இருந்தவர். அடுத்தது அவர் நடித்த உயர்ந்த மனிதன் உள்ளிட்ட பல படங்களுக்கு ஒப்பனைக் கலைஞராக பணிபுரிந்தார்.
கமல்ஹாசன் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தில் கமல்ஹாசனுக்கு ஒப்பனைக் கலைஞராக இருந்துள்ளார். ரஜினியின் நல்லவனுக்கு நல்லவன், போக்கிரிராஜா, ராகவேந்திரா, புதுக்கவிதை, ராணுவ வீரன் உள்ளிட்ட 45 படங்களுக்கு மேல் பணியாற்றி அவரது ஆஸ்தான ஒப்பனைக்கலைஞராக இருந்தவர். ரஜினிகாந்த் நடித்த சில படங்களில் சிறுசிறு வேடங்கள் ஏற்று நடித்துள்ளார்.
பரமக்குடியை பூர்வீகமாக கொண்ட முத்தப்பா, பர்மாவில் வளர்ந்தவர். சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் சுபாஷ் சந்திரபோஸ் நடத்திய இயக்கத்தில் பணியாற்றினார். சுதந்திரப் போராட்ட தியாகியும்கூட. கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த முத்தப்பாவுக்கு அவ்வப்போது உடல்நலக் குறைவு ஏற்பட்டுவந்துள்ளது.
சென்னை, வடபழனியில் வசித்து வந்த அவருக்கு சேதுலட்சுமி என்ற மனைவியும், 9 மகன்களும் உள்ளனர். முத்தப்பாவின் உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர். புதன்கிழமை காலை அவரது உடல் வடபழனி, ஏவி.எம் ஸ்டுடியோ பின்புறம் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.