பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு பயந்து தமிழகத்தின் மிக முக்கிய சுவாமிகளில் ஒருவரான நித்யானந்தா சுவாமிகள் இந்தியாவை விட்டு தப்பியோடியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், இதற்கு நித்யானந்தா தரப்பில் இருந்து இதுவரை எந்த மறுப்பும் வரவில்லை.
பிடதி ஆசிரமத்தில் இருந்த பெண் பக்தை ஒருவரை 2010ம் ஆண்டு நித்யானந்தா பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவரிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. நித்யானந்தாவின் போதாத காலம், அவரது பாஸ்போர்ட்டும் இந்த நேரத்தில் காலாவதியாகிவிட்டது. புதுப்பிக்க விண்ணப்பித்ததில், விசாரணை முடியும் வரை பாஸ்போர்ட்டை புதுப்பிக்க காவல்துறை தடை விதிததுவிட்டது.
இந்த நிலையில், பாலியல் புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்படலாம் என்ற நிலை ஏற்பட்டதை அடுத்து அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமானம் மூலம் வெளிநாட்டுக்குத் தப்பியோட முடியாத நிலையில், சாலை மார்கமாக நித்யானந்தா நேபாளம் சென்று அங்கிருந்து பிரிட்டன் ஆதிக்கத்தில் உள்ள ஒரு தீவுப் பகுதிக்குச் சென்றுள்ளதாக தொலைக்காட்சிச் செய்திகள் தெரிவிக்கின்றன.