சென்னை: தேடப்பட்டு வந்த ரவுடி பினு அம்பத்தூர் காவல்துறை துணை ஆணையரிடம் இன்று காலை சரண் அடைந்தார்.
பிப்ரவரி 6ம் தேதி முதல் 4 தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த ரவுடி பினு, அம்பத்தூர் காவல்துறை துணை ஆணையர் சர்வேஷ் ராஜ் முன்னிலையில் இன்று சரண் அடைந்தார்.
துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க உத்தரவிடப்பட்டதால் உயிருக்கு பயந்து காவல்துறையில் பினு சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. சரணடைந்த பினுவிடம், தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிப்ரவரி 6ம் தேதி சென்னையை அடுத்த மலையம்பாக்கத்தில் நள்ளிரவில் நடத்தப்பட்ட ரவுடி பினு பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது காவல்துறையினர் சுற்றி வளைத்து 76 ரவுடிகளை கைது செய்தனர். இந்தநிலையில், தப்பியோடி தலைமறைவான பினுவை தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள ரவுடி பினு மீது, கொலை, ஆள்கடத்தல் உள்ளிட்ட 15 வழக்குகள் உள்ளன. பூந்தமல்லி, வடபழனி, விருகம்பாக்கம் காவல்நிலையங்களில் பினு மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.