சென்னை, குன்றத்தூரில் பெண்ணை கீழே தள்ளி நகைகளைப் பறித்துச் சென்ற இளைஞரை போலீசார் புதுச்சேரியில் கைது செய்தனர்.
சென்னை, குன்றத்தூரை அடுத்த இரண்டாம் கட்டளை ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் அசோக்குமார் (60). மருந்து கம்பெனி பிரதிநிதியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜெயஸ்ரீ(56). இவர்கள் சனிக்கிழமை மாலை கடைக்கு செல்வதற்காக ராகவேந்திரா நகரில் பூங்கா அருகில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களுக்கு பின்னால் இளைஞர் ஒருவர் தொடர்ந்து வந்துள்ளார். திடீரென அந்த நபர் ஜெயஸ்ரீ கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து கொண்டு தப்பியோடி தலைமறைவானார். இச்சம்பவத்தில் ஜெயஸ்ரீ கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அந்த இளைஞரை விரட்டிச் சென்றனர். ஆனால் அவர் அப்பகுதியில் தயாராக இரு சக்கர வாகனத்துடன் நின்ற நபருடன் தப்பிச் சென்றார்.
இதுகுறித்து அசோக்குமார் புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் ஜெயஸ்ரீயிடம் இருந்து தங்க சங்கிலியைப் பறித்தது சென்னை, பொழிச்சலூரைச் சேர்ந்த சிவா மற்றும் சாலமன் என்பதை போலீசார் கண்டறிந்தனர்.
இதையடுத்து அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் புதுச்சேரியில் பதுங்கியிருந்த சிவாவை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சாலமனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.