ஆந்திர மாநிலத்தில் ஏரியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட 5 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும் காவல்துறைக்கு முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
ஆந்திர மாநிலம் கடப்பா ஒண்டிமேட்டா வனப்பகுதியின் ஏரியில் சேலம் அடியனூர் கிராமம் கீரங்காட்டைச் சேர்ந்த கருப்பண்ணன், ஜெயராஜ், சின்னபையன், சின்னதம்பி மகன் முருகேசன் மற்றும் அண்ணாமலை மகன் முருகேசன் ஆகிய 5 பேரின் சடலங்கள் அந்த மாநில காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். உயிரிழந்த 5 பேரின் உடல்களை தமிழக அரசின் சார்பில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டுள்ளேன்.
விசாரணைக்கு உத்தரவு: இந்தச் சம்பவம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளவும் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இறந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டு பிரேத பரிசோதனை முடிப்பதற்காக, கடப்பா ரிம்ஸ் அரசு மருத்துவமனைக்கு சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துறை ஆய்வாளர் தலைமையில் தனிப்படை ஒன்று ஆந்திர மாநிலத்துக்கு உடனடியாக செல்லும்படி உத்தரவிட்டுள்ளேன். இந்த துயரச் சம்பவத்தின் தன்மையையும், இறந்தவர்களின் வறிய நிலையையும் கருத்தில் கொண்டு, சிறப்பினமாக முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.