சிறுவாணியில் இருந்து கேரளம் அதிக அளவு நீரை வெளியேற்றியது தொடர்பாக அம்மாநில அரசுடன் பேசித் தீர்வு காணப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: பொள்ளாச்சி, காங்கயம், உடுமலை ஆகிய பகுதிகளுக்குப் பாதிப்பு இல்லாமல் பிஏபி திட்டத்தில் கேரளத்துக்குத் தண்ணீர் கொடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இவ்விவகாரத்தில் இரு மாநில மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு திட்டத்தை செயல்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இது தொடர்பாக தலைமைச் செயலாளர் மூலம் கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
சிறுவாணி அணையில் இருந்து கூடுதலாக நீர் திறக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அம்மாநில அரசுடன் பேசி, தண்ணீர் எடுப்பது நிறுத்தப்பட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்குள் அவரது சிலையைத் திறக்க வேண்டும் என்பதால் அச்சிலை வேகமாக வடிவமைக்கப்பட்டது. இதனால், ஜெயலலிதா உருவத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். இதில் ஏதாவது குறை காணப்பட்டால் முதல்வர், அமைச்சர்கள் கூறியதுபோல சிலையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.