ராணிப்பேட்டையைச் சேர்ந்த அதிமுக பிரமுகரின் வீடு, கட்டுமான அலுவலகம், கல் குவாரி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.
ராணிப்பேட்டை அண்ணா அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.எம்.சுகுமார் (52) . இவர், வாலாஜாபேட்டையை அடுத்த சாத்தம்பாக்கம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர், நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வந்தார். இதைத் தொடர்ந்து, தமிழ் மாநில காங்கிரஸில் இணைந்து செயல்பட்டு வந்தார். பின்னர், அதிமுவில் இணைந்து, நகர மன்றத் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்து வந்தார். மேலும், ஓபிஎஸ் - ஈபிஎஸ் அணியில் இருந்தபடியே டிடிவி தினகரனுக்கு மறைமுக ஆதரவாளராகச் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானத் தொழிலிலும், சாலை, பாலங்கள், அரசுக் கட்டடங்கள் கட்டும் ஒப்பந்ததாரராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், இவருக்குச் சொந்தமான அண்ணா அவென்யூ பகுதியில் உள்ள குமார் பில்டர்ஸ் அலுவலகம், வாலாஜாபேட்டை அருகே உள்ள கோபி புளு மெட்டல்ஸ் கல் குவாரி அலுவலகம், ஜி.கே.ரெடிமிக்ஸ் கான்கிரீட் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித் துறை அதிகாரி அசேன் தலைமையில் தலா 5 பேர் கொண்ட குழுவினர் புதன்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, வருமானக் கணக்குகள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும், அவரது கணக்குகளை சரிபார்க்கும் ஆடிட்டர், அலுவலக ஊழியர்கள், பணியாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இச்சோதனை தொடர்ந்து நள்ளிரவு வரை நீடித்தது. வருமானவரித் துறையினர் சோதனை பற்றி அறிந்த அவரது ஆதரவாளர்கள், கட்சியினர் அவரது வீட்டின் அருகே குவிந்தனர்.
இதுகுறித்து தொழிலதிபர் எஸ்.எம்.சுகுமாரிடம் கேட்ட போது, இது வழக்கமாக செய்யக் கூடிய ஆண்டு தணிக்கைத் தான் என்றார்.