சசிகலா குடும்பத்தின் தயவால் அதிமுகவில் யாரும் பதவிக்கு வரவில்லை என தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் கூறினார்.
அதிமுக நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 101 -ஆவது பிறந்த நாளையொட்டி, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பந்தலடியில் அதிமுக பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் அவைத் தலைவர் என். சுவாமிநாதன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, தமிழக உணவுத்துறை அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலருமான ஆர். காமராஜ் பேசியது: கட்சியை விட்டு வெளியேறிய சிறு கூட்டத்தினர் கூறும் விமர்சனங்களுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் மட்டுமல்ல கடைசி தொண்டன்கூட பதில் அளிக்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. அதிமுகவில் உறுப்பினரானது முதல் கடும் உழைப்பாலும், செயலாற்றலாலும் தான் ஒவ்வொரு தொண்டனும் பதவிக்கு வரமுடிந்தது. சசிகலா குடும்பத்தின் தயவால் அதிமுகவில் யாரும் பதவிக்கு வரவில்லை.
டிடிவி. தினகரனுக்கு சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்குக் கோரும் அளவுக்கு எண்ணிக்கையில்லாத நிலையில், திமுகவைப் பயன்படுத்தி ஜெயலலிதா அமைத்துத்தந்த இந்த ஆட்சியை கலைக்கத் துடிக்கிறார். இதுதான் நம்பிக்கை துரோகம். இவர் மற்றவர்களைப் பார்த்து துரோகிகள் என்கிறார். இனி எத்தனை தேர்தல் வந்தாலும் அதிமுக தான் வெற்றி பெறும். அதைத் தடுக்க யாராலும் முடியாது என்றார் அமைச்சர் காமராஜ்.