ஆண்டுத் தேர்வுகளுக்குத் தயாராகும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கும் வகையில் உளவியல் ஆலோசனைகள் வியாழக்கிழமை (பிப்.1) முதல் வழங்கப்படவுள்ளன.
இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:
ஆண்டு இறுதித் தேர்வுகளுக்குத் தயாராகும் சிபிஎஸ்இ மாணவர்களுக்கு கடந்த 20 ஆண்டுகளாக தேர்வுக்கு முந்தைய உளவியல் ஆலோசனைகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வழங்கி வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் தேர்வுகள் குறித்த அச்சத்திலிருந்து விடுபட்டு அவற்றைத் திறம்பட எதிர்கொள்ள முடியும்.
இந்த ஆண்டுக்கான ஆலோசனைகள் பிப்.1-ஆம் தேதி முதல் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது. இதற்காக சிபிஎஸ்இ பள்ளி முதல்வர்கள், சிறப்புப் பயிற்சி பெற்ற ஆலோசகர்கள், மனநல நிபுணர்கள் என 91 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் 71 பேர் இந்தியாவில் இருந்தும், 20 பேர் வெளிநாடுகளில் உள்ள மாணவர்களுக்காக நேபாளம், ஐக்கிய அரபு அமீரக நாடுகள், குவைத், சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்தும் தொலைபேசி மூலம் ஆலோசனைகளை வழங்குவர்.
உளவியல் ஆலோசனைகளைப் பெற விரும்பும் மாணவர்கள், பெற்றோர் 1800 11 8004 என்ற இலவச சேவை மைய எண்ணை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை அனைத்து நாள்களிலும் தொடர்புகொள்ளலாம். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க சிறப்பாசிரியர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.
இணையதளம் தளம் மூலம் பதில் பெற விரும்புவோர் counselling.cecbse@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் கேள்விகளை அனுப்பலாம்.