வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது மற்றும் ஆண்டு பராமரிப்புப் பணிகள் காரணமாக 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு முதல் நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், இதேபோன்று இரண்டாம் நிலையில் உள்ள மின் உற்பத்தியில் உள்ள 2 அலகில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என 1200 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது.
இங்குள்ள 2-வது நிலையில் இருக்கும் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பராமரிப்பு பணி காரணமாக 1-ஆவது நிலையில் உள்ள 2-வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.