சென்னை: தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் இருக்கும் சிலைகள் கடத்தப்படுவதை கண்மூடி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகத்தில் சிலைக் கடத்தலைத் தடுக்கக் கோரிய வழக்குகளில், ஸ்ரீரங்கம் கோயில் சிலைகள் கடத்தப்படுவதாகவும், சிலைக் கடத்தலை தடுக்க உத்தரவிடக் கோரியும் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மகாதேவன், சிலைக் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ளபோதே சிலைக் கடத்தலும் நடைபெறுகிறது. சிலைக் கடத்தல் சம்பவங்களை நீதிமன்றம் கண்மூடிக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மற்ற நேரிடும் என்று கூறினார்.
மேலும், மீட்கப்படும் சிலைகளை பத்திரமாக வைக்க பாதுகாப்பு அறைகள் அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டும், இதுவரை அமைக்கப்படாததற்கும் நீதிமன்றம் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.
சிலைக் கடத்தல் வழக்கில் இந்து அறநிலையத் துறையை எதிர் மனுதாரராக சேர்க்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், சிலை திருட்டு தொடருவது அரசு நிர்வாகத்தின் மோசமான நிலையை காட்டுவதாகவும் வருத்தம் தெரிவித்தார்.
சிலை திருட்டு தொடர்பான வழக்குகள் தீவிர விசாரணையில் இருக்கும் நிலையில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சிலைகள் மாயமானதாக புகார் எழுந்துள்ளது. இது நீதிமன்ற கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, தமிழகக் கோயில்களில் இருக்கும் சிலைகள் அடுத்தடுத்துக் கடத்தப்படுவது வேதனை அளிப்பதாகவும் நீதிபதி கூறினார்.