ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இடமாற்றம் செய்யக் கோரி போராட்டம் நடத்தியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட இயக்குநர் கெளதமனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தும் வகையில், சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடத்த எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டத்தின்போது போலீஸாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது காவலர் செந்தில்குமார் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக திரைப்பட இயக்குநர் கெளதமன் உள்ளிட்ட பலர் மீது திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இயக்குநர் கெளதமன் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் கெளதமன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை கெளதமன் அரியலூரில் தங்கி, விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.