தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் 6 நாள்களாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதையடுத்து, சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
மேற்குதொடர்ச்சி மலைகளில் பலத்த மழை பெய்து வருவதால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க மேகமலை வன உயிரின சரணாலயத்தினர் தடை விதித்தனர். மேலும் அருவி பகுதிக்கு செல்லவும் அனுமதி மறுத்தனர். இதனால் அருவிக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இந்நிலையில் சனிக்கிழமை அருவியில் சீரான நீர்வரத்து இருந்தது. இதனை உறுதி செய்த வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதித்தனர். கடந்த 6 நாள்களாக விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் உற்சாகத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.
இது குறித்து வனச்சரணாலய ஊழியர் ஒருவர் சனிக்கிழமை கூறியது: மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளதால், அருவியின் நீர் வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. தற்போது நீர்வரத்து சீராக உள்ளதால் சுற்றுலாப் பயணிகளை அருவியில் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.