ஜாக்டோ ஜியோ சார்பில் சென்னையில் கடந்த மூன்று நாளாக நடைபெற்று வந்த உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களைச் சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை எழிலக வளாகத்தில் கடந்த திங்கள்கிழமை தொடங்கினர்.
10-க்கும் மேற்பட்டோர் மயக்கம்: போராட்டத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நிர்வாகிகளுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆதரவு தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம் புதன்கிழமை நீடித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், அமமுக துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் உண்ணாவிரதப் போராட்டத்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதையடுத்து கோரிக்கைகளை, முதல்வரை நேரில் சந்தித்து தெரிவிப்பதற்காக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சென்னை தலைமைச் செயலகத்தை நோக்கி புதன்கிழமை மாலை பேரணியாகச் செல்ல முயன்றனர்.
அப்போது போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் புதுப்பேட்டையில் உள்ள ஒரு சமுதாய நலக்கூடத்தில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
இதையடுத்து நடைபெற்ற பேச்சுவார்த்தை காரணமாக போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாகவும், அடுத்தகட்ட போராட்டம் குறித்து உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசித்து அறிவிக்கப்படும் என்றும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்தனர்.