பிஎஸ்என்எல் நிறுவனத்தின் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தி, அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கிலிருந்து மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்துள்ளது.
தயாநிதி மாறன் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, சன் டிவிக்கு பிஎஸ்என்எல் அதிவேக தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தச் சட்ட விரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் ஆகியோர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக மாறன் சகோதரர்கள் மற்றும் பிஎஸ்என்எல் பொது மேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொது மேலாளர் வேலுச்சாமி, தயாநிதிமாறனின் தனிச் செயலாளரான கெளதமன், சன் டிவி ஊழியர்களான கண்ணன், ரவி ஆகிய 7 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் ஆஜராக மாறன் சகோதரர்களின் வழக்குரைஞர்கள் மட்டுமே வந்திருந்தனர். மற்ற 5 பேரின் சார்பில் வழக்குரைஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.