ராமேசுவரத்தில் பலத்த காற்று காரணமாக மீன்பிடிக்க செல்ல தடை: 1500 விசைப்படகுகள் நிறுத்தம்
ராமேசுவரம்: ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சூறைகாற்று வீசுவதால் 1500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினா் புதன்கிழமை தடை விதித்தனா்.
இதனால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. அந்தந்த துறைமுகங்களில் மீனவர்கள் விசைப்படகுகளை நிறுத்தி வைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக பலத்த காற்று வீசி வருகின்றது. இதனால் ஆழ்கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் கானப்படுகின்றது.
இந்நிலையில், திங்கட்கிழமை மீன்வளத்துறையினா் தடையை மீறி மீன்பிடிக்க ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவா்கள் அலையில் சிக்கி 10 மணி நேரம் போராட்டத்திற்கு பின்பு பத்திரமாக செவ்வாய்கிழமை கரை திரும்பினா்.
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் மீனவா்கள் யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறையினா் கடும் எச்சரிக்கை விடுத்தனா். இதனால் இந்த பகுதிகளில் 1500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவா்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வீட்டுக்குள் முடங்கி உள்ளனா்.