ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தில்லியில் வியாழக்கிழமை சந்தித்து பேசினார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை கமல்ஹாசன் புதன்கிழமை சந்தித்து தமிழக அரசியல் குறித்து ஆலோசனை நடத்தியிருந்த நிலையில், சோனியா காந்தியுடனான இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியை தில்லி அக்பர் சாலையிலுள்ள அவரது இல்லத்தில் கமல்ஹாசன் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் அவர்கூறியதாவது:
ராகுல் காந்தியை சந்தித்து பேசியதைத் தொடர்ந்து மரியாதை நிமித்தமாக சோனியா காந்தியைச் சந்தித்து பேசினேன். தமிழக அரசியல் சூழல் குறித்துப் பேசினேன்.
தமிழகத்தில் ஜனநாயகத்துக்கு ஆபத்தான சூழல் நிலவுகிறது. இது குறித்தும் அவரிடம் பேசினேன்.
2019 மக்களவைத் தேர்தல், காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி தொடர்பாகப் பேசவில்லை. அதுகுறித்து பின்னர் ஒருவேளை பேசலாம்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்துக்கு கர்நாடக மாநிலத்தின் சார்பில் இன்னும் உறுப்பினர்கள் மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கப்படவில்லை. இது தொடர்பாக அந்த மாநில முதல்வர் குமாரசாமியுடன் பேசுவேன் என்றார் அவர்.