உயர் கல்வியில் இட ஒதுக்கீடு கோரி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் வியாழக்கிழமை பச்சைக் கொடியுடன் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட உயர் கல்வி பயில அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்த இட ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில், மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, தமிழகம் முழுவதும் மருத்துவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் வியாழக்கிழமை காலை பச்சைக் கொடிகளை கையில் ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசு மருத்துவர்களுக்கு மீண்டும் உயர் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி முழக்கங்களை எழுப்பினர். அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மருத்துவர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இதில், 50-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.