உடுமலை சங்கர் கொலை வழக்கு: மேல்முறையீடு செய்ய அனுமதி
உடுமலை சங்கர் கௌரவ கொலை வழக்கில் மூன்று பேர் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உடுமலைப்பேட்டை சங்கர் கௌரவ கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 11 பேரில், 6 பேருக்கு திருப்பூர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தும், இருவருக்கு குறைந்தபட்ச தண்டனைஅளித்தும் தீர்ப்பளித்தது. மேலும் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கர் மனைவி கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை மற்றும் 16 வயது உறவினர் ஆகிய மூவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இந்நிலையில் இந்த மூவரின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு மனு தாக்கல் செய்ய அனுமதிக்கக் கோரி, உடுமலைப்பேட்டை துணைக் காவல் கண்காணிப்பாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.டி.செல்வம், என்.சதிஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், மேல்முறையீடு செய்ய அனுமதித்து உத்தரவிட்டனர்.