தீ விபத்து எதிரொலி: வனவர் தாற்காலிக பணி நீக்கம்
தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி-கொழுக்குமலை வனப் பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றிருந்தவர்கள் காட்டுத் தீயில் சிக்கி பலியான சம்பவம் தொடர்பாக, முந்தல் வனவர் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
போடி, முந்தலை அடுத்துள்ள குரங்கணி-கொழுக்குமலை வனப் பகுதியில் மார்ச் 11-ஆம் தேதி மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சென்னை, ஈரோடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 36 பேர் காட்டுத் தீயில் சிக்கினர். இவர்களில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 15 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, பணியின்போது அஜாக்கிரதையாக இருந்ததாக, முந்தல் வனவர் ஜெய்சிங் என்பவரை தாற்காலிகப் பணி நீக்கம் செய்து, மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார். இவர், காட்டுத் தீ பரவி விபத்து ஏற்பட்ட கொட்டகுடி வனப் பகுதிக்கு வனவராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.