திருச்சி திருவெறும்பூரில் உயிரிழந்த உஷாவுக்காக போராடி கைதான 26 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம், சூலமங்கலத்தைச் சேர்ந்த தம்பதி ராஜா (36), உஷா (30) கடந்த புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் துவாக்குடி அருகே வந்தபோது, வாகனச் சோதனையில் நிற்காமல் சென்றதாகக் கருதி அவர்களை போக்குவரத்து காவல் ஆய்வாளர் இருசக்கர வாகனத்தில் துரத்திச் சென்று எட்டி உதைத்ததில் சம்பவ இடத்திலேயே உஷா உயிரிழந்தார். ராஜா காயமடைந்தார்.
இதையடுத்து, கிளர்ந்தெழுந்த ஏராளமான பொதுமக்கள் திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் 4 மணிநேரம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர். மேலும் போராட்டத்தின் போது பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்ததாக 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து கைதானவர்கள் ஜாமீன் கேட்டு திருச்சி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் 26 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.