குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் புதன்கிழமை காலை வரை பெய்த பலத்த மழையால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் பகுதியில் சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமிருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அவ்வப்போது மிதமான சாரல் பெய்தது. இதனால் பேரருவி, ஐந்தருவி, புலியருவியில் தண்ணீர் மிதமான அளவில் விழத்தொடங்கியது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தொடங்கி புதன்கிழமை அதிகாலை வரை பலத்த மழை பெய்தது. இதனால், பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.
பிற்பகல்முதல் அருவிகளில் தண்ணீர் குறைவாக விழத் தொடங்கியது. இதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாக மழை பெய்து, அருவிகளில் தண்ணீர் கொட்டியதால், சுற்றுலாப்பயணிகள் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர். கோடைக்காலத்தில் வழக்கமாக அனைத்து அருவிகளும் வறண்டிருக்கும். அதற்கு மாறாக, இப்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.