திருமுல்லைவாயில், திருமுடிவாக்கம் தொழிற்பேட்டைகளில் புதிய கட்டடங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்து வைத்தார். புதிய கட்டடங்களை காணொலிக் காட்சி மூலம் அவர் திறந்தார்.
இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 13) நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-
தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் மூலம், திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில், காஞ்சிபுரம் மாவட்டம் திருமுடிவாக்கம், சேலம் மாவட்டம் கருப்பூர், திருச்சி மாவட்டம் வாழவந்தான்கோட்டை, மதுரை மாவட்டம் கப்பலூர் ஆகிய இடங்களில் மகளிருக்கென தனியாக இயங்கி வரும் தொழிற்பூங்காக்களில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2014-இல் அறிவித்தார்.
அதன்படி, ஐந்து இடங்களிலும் உலகத்தரம் வாய்ந்த நேர்த்திமிகு மையக் கட்டடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். அவற்றில், தொழில்நுட்பம், தொழில்திறன், விற்பனை உதவி ஆகியவைகளை மேம்படுத்தும் விதமாக பொது காட்சியகம், விற்பனை மையம், வியாபார மையம், பொதுக் கூட்ட அரங்கம், பொது பயிற்சிக்கூடம், நிர்வாக அலுவலகம், வங்கி, குழந்தைகள் காப்பகம், மருத்துவ மையம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
விளையாட்டுத் துறை: வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மாநில முதன்மை நிலை பளுதூக்கும் மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
இந்தக் கட்டடத்தின் கீழ்த்தளத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய சர்வதேச அளவிலான ஆறு பளுதூக்கும் பயிற்சி மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல், இரண்டாவது தளங்களில் பெண், ஆண் வீரர்கள் தங்குவதற்கான அறைகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும், இந்தக் கட்டடத்தில் படிக்கும் அறை, மருத்துவ அறை, குளியலறைகள், கழிவறைகள், பயிற்சிக்காக அதிநவீன பளுதூக்கும் உபகரணங்கள் போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் பா.பென்ஜமின், க.பாண்டியராஜன், கே.சி.வீரமணி, நிலோபர் கபீல், பாலகிருஷ்ணாரெட்டி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.