சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளை ஒழுங்குபடுத்தும் 'மருத்துவமனை ஒழுங்கு மசோதா' குறித்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
மருத்துவமனைகள் ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சட்ட மசோதா குறித்து தலைமைச் செயலகத்தில் இன்று அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது இருவரும் பேசுகையில், மருத்துவமனை ஒழுங்குமுறை சட்ட மசோதா தொடர்பாக, ஒரு வாரத்துக்குள் விதிமுறைகளை வெளியிட உள்ளோம்.
இந்த மருத்துவமனைகள் ஒழுங்கு சட்ட மசோதாவின் அடிப்படையில், தமிழகத்தில் துவங்க உள்ள புதிய மருத்துவமனைகள் 6 மாதத்துக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். ஏற்கனவே செயல்படும் மருத்துவமனைகள் 9 மாதத்துக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். தனியார் மருத்துவமனைகளின் தரத்தை உறுதி படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் மருத்துவமனைகள் அடிப்படை வசதிகளுடன் இருக்க வேண்டும்.
தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும்.
இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் போலி மருத்துவர்கள் களையப்படுவார்கள். அவ்வாறு தமிழக அரசிடம் பதிவு செய்யப்படவில்லை என்றால் அந்த மருத்துவமனைகள் செயல்பட முடியாத சூழ்நிலை உருவாகும் என்று தெரிவித்தனர்.
மருத்துவத்தில் தமிழகம் முதன்மையான மாநிலமாக விளங்குகிறது. தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள், கிளினிக் என அனைத்தும் அடங்கியுள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.