தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு, புதுச்சேரி வழக்குரைஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் எனவும், இதில் 60,000 வழக்குரைஞர்கள் பங்கேற்கின்றனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்புத் தலைவர் எஸ்.கே.வேல், செயலர் செல்ல.ராசாமணி ஆகியோர் வெளியிட்ட அறிக்கை: ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி தூத்துக்குடி மாவட்ட மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீஸார் காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காவல் துறையினரின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி, காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
துப்பாக்கிச்சூடு நடத்திய காவல் துறையினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கையெடுக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 60,000 வழக்குரைஞர்கள் வரும் வெள்ளிக்கிழமை ஒரு நாள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.