ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆணையத்தின் முன்பு ஜெயலலிதாவின் பள்ளித்தோழி பதர் சய்யீத் மற்றும் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆகியோர் வெள்ளிக்கிழமை ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆணையத்தில் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், அரசு அதிகாரிகள், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதுவரை 45-க்கும் அதிகமானவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுத்துள்ளனர்.
ஜெயலலிதாவின் பள்ளித் தோழி பதர் சய்யீத், சென்னை போலீஸ் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆகிய இருவரும் விசாரணை ஆணையம் முன்பு வெள்ளிக்கிழமை ஆஜராகினர். ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த தகவல்களை விசாரணை ஆணையம் முன்பு பதர் சய்யீத் வழங்கினார். தொடர்ந்து ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் ஆஜாராகி, நீதிபதியின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். இவர், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, கடந்த 2011-ஆம் ஆண்டு உளவுப்பிரிவு டி.ஐ.ஜி-யாக இருந்தார். அதன்அடிப்படையில் ஜெயலலிதா உடல் நலம் குறித்த தகவல்களைப் பெற ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.