முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மாநில வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி ஜெ. குரு(57) சென்னையில் வெள்ளிக்கிழமை காலமானார்.
நுரையீரல் பாதிப்பு காரணமாக கடந்த 41 நாள்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.குரு சிகிச்சை பெற்று வந்தார். சுவாசத்தைச் சீராக்குவதற்காக டிரக்யாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு இயற்கையாகவே சுவாசித்து வந்தார். அதன் பிறகு மீண்டும் சுவாசப் பிரச்னை ஏற்பட்டதன் காரணமாக செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் ஜெ.குரு காலமானார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் பிறந்தவர் குரு. அவரின் கிராமத்தின் பெயராலேயே காடுவெட்டி குரு என அழைக்கப்பட்டார். வன்னியர் சங்கத்தின் தலைவராக பல ஆண்டுகளாக இருந்து வந்தார்.
பாமகவின் சார்பில் 2001-இல் ஆண்டிமடம் தொகுதியிலிருந்தும், 2011-இல் ஜெயங்கொண்டம் தொகுதியில் இருந்தும் வெற்றிபெற்று சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றியவர். அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அவரின் உடல் பதப்படுத்தப்பட்டு, அங்கிருந்து சொந்த ஊரான காடுவெட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளது.
ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இரங்கல்: குருவின் மறைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.