பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எடுத்து வரும் முயற்சியால் பாஜக பதற்றமடைந்துள்ளது என்று மாநிலங்களவை திமுக குழு தலைவர் கனிமொழி கூறினார்.
பாஜகவுக்கு எதிராக கூட்டணி அமைப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். சந்திரபாபு நாயுடுவின் முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கனிமொழி வெள்ளிக்கிழமை அவர் சுட்டுரையில் கூறியிருப்பது: தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முன்னெடுத்து வரும், பாஜக எதிர்ப்பு கூட்டணிக்கான முயற்சிகள், பாஜகவை பதற்றம் கொள்ள வைத்துள்ளது. இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையைப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் தேவை.
மு.க.ஸ்டாலின் கூறியுள்ளதைப் போன்று, மதவாத பாஜகவையும், ஊழல் அதிமுகவையும் தோற்கடித்தே தீர வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும், தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைய வேண்டும் என்று கனிமொழி கூறியுள்ளார்.