சபரிமலை பக்தர்களுக்கு உதவும் சேவையில் அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் தமிழ் மாநிலக் குழு சார்பில் 3 ஆயிரம் தொண்டர்கள் ஈடுபடுவர் என அக்குழுவின் மாநிலத் தலைவர் மு.விஸ்வநாதன் கூறினார்.
இதுதொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் கூறியது:
சபரிமலை வரும் பக்தர்களுக்கு பம்பை முதல் சன்னிதானம் வரை உள்ள முகாம்களில் தூய்மையான சுக்கு தண்ணீர், இலவச மருத்துவ உதவி, ஸ்ட்ரெச்சர் சேவை, ஆக்ஸிஜன் பார்லர், துப்புரவுப் பணிகள் ஐயப்ப சேவா சங்கத்தால் செய்யப்பட உள்ளன.
ஐயப்ப பக்தர்கள் மலையேறும்போது மூச்சுத் திணறல், மாரடைப்பு, உடல் நலக்குறைவு ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவ முகாமுக்கு கொண்டு செல்ல அவசர பிரிவு தொண்டர்கள் 24 மணி நேரமும், தயார் நிலையில் இருப்பர். பக்தர்களின் வசதிக்காக 22 ஆக்ஸிஜன் பார்லர்கள் அமைக்கப்பட்டு, பயிற்சி பெற்ற தொண்டர்கள் பணியமர்த்தப்படுவர்.
தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், கடலூர், திருச்சி, மதுரை, தேனி, வீரபாண்டி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் முகாம்கள் அமைக்கப்படும். அங்கு பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், மருத்துவ உதவிகள் வழங்கப்படும்.
கேரளத்தில் எருமேலி, அழுதா, கல்லிடங்குன்று, கரிமலை, பெரியாணவட்டம், பம்பா, நிலக்கல், அப்பாச்சிமேடு, மரக்கூட்டம் ஆகிய இடங்களிலும் முகாம் அமைக்கப்பட்டுள்ளன. ஐயப்ப சேவா சங்கத்துடன், மதுரை அப்போலோ மருத்துவமனை இணைந்து பம்பையில் "தீவிர இதய சிகிச்சை மையம்' அமைக்கப்படுகிறது.
நிலக்கல், பம்பை, சபரிமலை, சன்னிதானம் பகுதிகளில் துப்புரவுப் பணிகளை மேற்கொள்வதற்காக ஐயப்ப சேவா சங்கத்தின் தமிழ் மாநில அமைப்பு மூலமாக துப்புரவுப் பணியாளர்கள் ஆயிரம் பேர் அனுப்பி வைக்கப்படுவர் என்றார்.
அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்ல அனுமதி அளித்துள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கேட்டதற்கு, "ஐயப்பா சேவா சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு செவ்வாய்க்கிழமை (நவ.13) விசாரணைக்கு வரவுள்ளது. எங்களது சங்கத்தைச் சேர்ந்தவர்கள் 10 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள், 50-வயதுக்கு மேற்பட்ட பெண்களை மட்டுமே சபரிமலைக்கு அழைத்துச் செல்வர்' என்றார்.