தீபாவளியின்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டதில், தெற்கு ரயில்வேக்கு ரூ.2.72 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் ரயில் பயணத்தின்போது பயணிகளின் நெருக்கடியைக் குறைக்கும் வகையில், சிறப்பு ரயில்கள் ஆண்டுதோறும் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் பொங்கல், வேளாங்கண்ணி திருவிழா, தீபாவளி உள்ளிட்ட காலங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கிறிஸ்துமஸ், சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்குப் பூஜைக்கும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தீபாவளிக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள்: இந்நிலையில், நிகழாண்டில், தீபாவளி பண்டிகையையொட்டி, 20 சுவிதா சிறப்பு ரயில்கள், 16 சிறப்புக் கட்டண ரயில்கள் என மொத்தம் 36 ரயில்கள் சென்னையில் இருந்து தமிழகத்தின் தென்பகுதிகள், கோவை, எர்ணாகுளம், ஹவுரா ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்டன. சிறப்பு ரயில்களில் 27,080 பயணிகள் பயணம் மேற்கொண்டதன் காரணமாக தெற்கு ரயில்வேக்கு ரூ.2.72 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 24 சிறப்பு ரயில்களில் 22,108 பயணிகள் பயணம் செய்தனர். அதன் மூலம் ரூ.1.8 கோடி வருவாய் ஈட்டப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் கூறினர்.