லட்சத்தீவு அருகே படகு பழுதாகி நடுக்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் உள்பட 13 பேர் செவ்வாய்க்கிழமை பத்திரமாக மீட்கப்பட்டனர்.
குமரி மாவட்டம், தூத்தூரை சேர்ந்த கிளிட்டஸ் என்பவருக்குச் சொந்தமான லூமானுஸ் என்ற விசைப்படகில் நீரோடி, தூத்தூர், மற்றும் கேரள மாநிலம் கருங்குளம், வடமாநில மீனவர்கள் உள்பட 13 பேர், கடந்த அக்டோபர் 15ஆம் தேதி தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். கர்நாடக மாநிலம், மங்களாபுரம் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, கடந்த 9ஆம் தேதி விசைப்படகு பழுதானது. இதுகுறித்து தெற்காசிய மீனவ தோழமை பொதுச்செயலர் சர்ச்சிலிடம், லட்சத்தீவு கடலில் தவித்த மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, இந்திய கடலோரக் காவல்படை விக்ரம் என்ற கப்பல் உதவியுடன், மீனவர்கள் 13 பேரையும் பத்திரமாக மீட்டனர்.