புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நெல் ஜெயராமன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்யும் என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இயற்கை விவசாயியும், பாரம்பரிய நெல் விதைகள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான நெல் ஜெயராமன் புற்றுநோய் பாதிப்பு காரணமாக, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் செவ்வாய்க்கிழமை சந்தித்தனர். இதைத்தொடர்ந்து, அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறும்போது, முதல்வரின் அறிவுறுத்தல்படி, நெல் ஜெயராமனைச் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தோம். அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்யும். தற்போது, அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றார்.