இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு இஸ்ரேல் அரசின் சுற்றுலாத் துறை அழைப்பு விடுத்துள்ளதாக பிலிப்பின்ஸ், இந்தியாவுக்கான இஸ்ரேல் சுற்றுலா அமைச்சக இயக்குநர் ஹசன் மதா தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஹசன் மதா கூறியது: இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை மட்டும் இந்தியாவிலிருந்து 48,800 பேர் இஸ்ரேலுக்கு சுற்றுலா வந்துள்ளனர். அதில் 25 சதவீதம்பேர் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.
இது கடந்த 2016-ஆம் ஆண்டில் 30,800 ஆக இருந்தது. இங்கு சுற்றுலா செல்வதற்கு ஒருவருக்கு ரூ.35 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை செலவாகும்.
பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணத்திற்குப் பின், இரு நாடுகளின் வர்த்தகம் மற்றும் சுற்றுலாவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்திய சுற்றுலாப் பயணியரின் வருகையை அதிகரிக்கும் வகையிலும் சுற்றுலாத் துறையில் உள்ள அனைத்துப் பிரிவினரையும் ஒருங்கிணைப்பதற்காகவும் இந்தியாவில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சாலைவழிக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இஸ்ரேல் சுற்றுலாத் தலங்களில் ஜெருசலேம், ஹாலோம், சிட்டிஸ்கேப், டெட்சீ, இலாட், வடக்கு இஸ்ரேல், நேகவ் உள்ளிட்ட பகுதிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவரும். சுற்றுலா வருகையை அதிகரிப்பதற்காக இந்தியப் பயணிகளின் விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தவுள்ளோம்.