தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும்

தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது.


தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும்.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் செவ்வாய்க்கிழமை கூறியது: 
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் திங்கள்கிழமை நிலைகொண்டிருந்த வலுவான குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தொடர்ந்து அதே பகுதியில் நீடிக்கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமானது முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். 
பலத்த மழை: தமிழகத்தில் காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. 
சென்னையில் மழை: சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும். இடைவெளிவிட்டு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றார் எஸ்.பாலச்சந்திரன்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழி காரணமாக, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு புதன்கிழமை (நவ.21) மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com