நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும்: ஸ்டாலின்

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு உடனே பெற்றுத் தர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும்: ஸ்டாலின்

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு உடனே பெற்றுத் தர வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நீட் தேர்வு எழுதலாம் என்று மத்திய பாஜக அரசு அறிவித்திருந்தாலும், கேள்வித்தாளை மொழிபெயர்ப்பதில் பெரும் குளறுபடிகளையும், குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது.
இதன் மூலம் ஆர்வத்துடன் மாநில மொழிகளில் நீட் தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கையையும், மாநில மொழிகளின் முக்கியத்துவத்தையும் படிப்படியாகக் குறைத்துவிடும் மனப்பான்மையுடன் மத்தியில் உள்ள பாஜக அரசு செயல்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது.
நீட் தேர்வினை தமிழில் எழுதியோர் எண்ணிக்கை மட்டுமின்றி, மற்ற மாநில மொழிகளில் எழுதியோர் எண்ணிக்கையும் பெருமளவில் குறைந்து வரும் மாநில மொழிகளுக்கு எதிரான அபாயகரமான நிலை தொடருகிறது. ஏற்கெனவே, 2018 -ஆம் ஆண்டுக்கான நீட் கேள்வித்தாளைத் தமிழில் மொழிபெயர்த்ததில் 49 பிழைகள் கண்டுபிடிக்கப்பட்டு, 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள்.  
கேள்வித்தாள் குளறுபடி தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் பொது நல வழக்கு தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் ஏ.எம். பசீர் அகமது ஆகியோர் அடங்கிய அமர்வு, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது. 
மாநில மொழியில் தேர்வு எழுத...:ஆனால், அந்த தீர்ப்புக்கும் தடை பெற்று, தமிழக மாணவர்களுக்கு உயர் நீதிமன்றம் அளித்த நீதியையும் மத்திய பாஜக அரசு மறுத்து விட்டது. இதுபோன்ற கேள்வித்தாள் மொழிபெயர்ப்பு குழப்பங்களால், தங்களது மாநில மொழியில் நீட் தேர்வு எழுதவே மாணவர்கள் தயங்கி ஒதுங்கும் சூழ்நிலையும், மாநில மொழிகளில் எழுதினால் மருத்துவர் கனவு பறிபோகும் என்ற பதற்றமும் மாணவ, மாணவியர் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் உள்ள மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வின் மூலம் சிதைத்துள்ள மத்திய பாஜக அரசு, அரசியல் சட்ட அங்கீகாரம் பெற்றிருக்கும் மாநில மொழிகளில் தேர்வு எழுதுவதை ஊக்குவித்திடவும் உரிய ஏற்பாடுகளைச் செய்யாமல், ஒருதலைப்பட்சமான அணுகுமுறையுடன் வஞ்சித்ததன் விளைவாக மாநில மொழிகளில் தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை குறைந்து மாயமாகி வருகிறது.
அது கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேருவதற்கு மிகப்பெரிய தடைக்கல்லாக அமைந்து விடும். 
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: எனவே, அனைத்து வகையிலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களுக்கு உதவிகரமாக இல்லாத இந்த நீட் தேர்வை ரத்து செய்வதே மாணவர்களுக்குச் சம உரிமை வழங்க வழிவகுக்கும். 
அதனால்,  மருத்துவக் கல்வியில் சேருவதற்கான நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு

தமிழகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்டுள்ள மசோதாவுக்கு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய பாஜக அரசு உடனே பெற்றுத் தர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com