ரன்வீர் ஷா, கிரண் ராவின் முன்ஜாமீன் மனு மீதான வழக்கு 23-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தொழிலதிபர் ரன்வீர் ஷா வீடு மற்றும் பண்ணை வீடுகளில் சோதனை நடத்திய சிலைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், அங்கிருந்து ஏராளமான பழங்கால சிலைகள் மற்றும் கலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், ரன்வீர் ஷாவின் தோழி கிரண் ராவின் போயஸ் தோட்ட இல்லத்திலும் சோதனை நடத்திய சிலைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார், அங்கிருந்தும் சிலைகள், பழங்கால கல்தூண்கள் மற்றும் கலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இருவரும் விசாரணைக்கு ஆஜராகுமாறு, சிலைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் சம்மன் அனுப்பினர். இந்நிலையில், இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இம்மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் அனுமதி கோரினர். மேலும் சிலைக் கடத்தலில் ரன்வீர் ஷா மற்றும் கிரண்ராவுக்கு நேரடி தொடர்பு உள்ளதாக தீனதயாளன் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் ரன்வீர் ஷாவிடம் உள்ள ஆவணங்கள் போலி எனவும் தெரிவித்தனர்.
இதையடுத்து இரண்டு நிறுவனங்களிடம் இருந்து வாங்கியதாக ரன்வீர் ஷா மற்றும் கிரண் ராவின் வாதத்தை ஏற்க முடியாது எனக்கூறிய நீதிபதிகள் இந்த வழக்கில் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.