தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டில் இரண்டு பசு மாடுகள் திருட்டுபோனது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை சாலிகிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். இங்கு அப்பாராவ் என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்பாராவ் குடும்பத்தினர் அங்கு தங்கியுள்ளனர். புதிதாக கட்டப்படும் வீட்டின் பின்புறத்தில் வேங்கை இன 3 கறவை பசு மாடுகள் வளர்க்கப்படுகின்றன.
அப்பாராவ் புதன்கிழமை இரவு பசு மாடுகளுக்கு தீவனம் வைத்து விட்டு, தூங்கச் சென்றுவிட்டார். வியாழக்கிழமை காலை படுமாடுகளுக்கு தண்ணீர் வைப்பதற்காக அப்பாராவ் சென்றபோது, அங்கு இரண்டு பசு மாடுகள் காணாமல் போயிருந்தன. இதுகுறித்து பூந்தமல்லி நகர தேமுதிக செயலர் ஸ்ரீராம் பூந்தமல்லி போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இந்த மாடுகள் தானாக வெளியேறி காணாமல் போய்விட்டனவா, யாரேனும் அந்த மாடுகளை திருடிச் சென்றுவிட்டார்களா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.