புதிதாக 320 நீதித்துறை நடுவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
தமிழ்நாடு மாநில நீதித்துறை அகாதெமியும், தமிழ்நாடு குற்றவழக்குத் தொடர்புத் துறையும் இணைந்து அரசு வழக்குரைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்துகின்றன. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை 7 கட்டங்களாக மதுரையில் நடைபெற உள்ள இப்பயிற்சி வகுப்புகளின் தொடக்க விழா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், டி.எஸ்.சிவஞானம், ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்று பயிற்சி வகுப்புகளைத் தொடங்கி வைத்தனர்.
இதில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியது: நீதிமன்றம் கேட்கும் அனைத்து உதவிகளையும் தமிழக அரசு உடனுக்குடன் செய்து வருகிறது. அரசு வழக்குரைஞர்களுக்கு சனிக்கிழமை முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை, 7 கட்டங்களாகப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதற்காக தமிழக அரசு சுமார் ரூ.7 கோடியை ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் 88 சதவீத நீதிமன்றங்கள், சொந்தக் கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன. விரைவில் அனைத்து நீதிமன்றங்களும், சொந்தக் கட்டங்களில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது, தமிழகத்தில் உள்ள 725 நீதித்துறை நடுவர் மன்றங்களில், 322 நீதித்துறை நடுவர்கள் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நியமிக்கப்பட்டனர். மேலும், 320 புதிய நீதித்துறை நடுவர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர் என்றார்.